லாலுவை விட மோசமான நிலையில் ஜெயலலிதா..!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவும், மாட்டுத் தீவண ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிலையில்தான் உள்ளனர். ஆனால் லாலு நிலைமை பரவாயில்லை. அவரால் 6 வருடங்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் ஜெயலலிதாவுக்கு 10 வருடம் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவண ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால், தனது எம்.பி. பதவியை இழந்தார். 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் அவருக்குத் தடை வந்து சேர்ந்தது.
தற்போது இதை விட மோசமான நிலையில் ஜெயலலிதா வந்து நிற்கிறார். 4 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதா 10 வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடி்யாது.
அதாவது தண்டனைக் காலமாக 4 வருடமும், அதன் பின்னர் 6 வருடமும் அவரால் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது.
தண்டனை 2 ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், தேர்தலில் போட்டியிட தனியாக தடை ஏதும் ஏற்பட்டிருக்காது. ஆனால் நிலைமை கை மீறிப் போய் விட்டது.
தமிழக சட்டசபைக்கு அடுத்து 2016ம் ஆண்டு தேர்தல் வருவது குறிப்பிடத்தக்கது.
இப்போதைக்கு 10 வருடம் சான்ஸே இல்லை
தற்போதைய நிலையில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவரால் 10 வருடத்திற்குத் தேர்தல் எதையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
தசரா விடுமுறை: ஜெயலலிதா ஜாமீன் பெறுவதில் சிக்கல்...
அதே போல 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக ஜாமீன் பெற முடியாது. தண்டனை பெற்ற ஜெயலலிதா, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்த பிறகே, ஜாமீன் பெற முடியும்.
கர்நாடகாவில் அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்றங்களுக்கு தசரா விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஜாமீன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.