டக டக டக டக டக டர்ர்ர்… வாயில் ஹெலிகாப்டர் விட்ட ஸ்டாலின்
திருச்சி: உங்களை எல்லாம் நேர்ல வந்து பாக்கிறப்ப எனக்கு உற்சாகமாக இருக்கு... உங்க எழுச்சியான குரலை கேட்கிறப்ப எனக்கு புல்லரிக்குது... அதனாலதான் நான் ரோடு வழியா உங்களை சந்திக்க வந்திருக்கேன்.
ஆனா ஜெயலலிதா எப்படி வர்றாங்க... டக டக டக டக டக டக... டர்ர்ர்.... என்று கையால் சுத்தி வாயால் ஹெலிகாப்டர் விட்டார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
திருச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து மத்திய பேருந்து நிலையம் அருகே மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் கூறியதாவது:
''வருகிற நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளராக தி.மு.க.வை சேர்ந்த அன்பழகன், கலைஞரால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.
அன்பழகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் என்று உங்களிடம் வாக்கு கேட்டு உங்களை தேடி நீங்கள் இருக்கும் இடம் தேடி நேரடியாக வந்துளோம்
ஹெலிகாப்டரில் வரவில்லை.
நான் சாலை வழியாக வந்தேன். ஆனா ஜெயலலிதா எப்படி வர்றாங்க... டக டக டக டக டக டக டர்ர்ர்...( கையை சுத்தி காண்பித்து வாயில் சவுண்ட் எபெக்ட் தரவே கூட்டம் ஆர்ப்பரிக்கிறது). இப்படி ஹெலிகாப்டர் மூலம் வர்றாங்க. எனவே ஹெலிகாப்டரை பார்த்தாலே ஜெயலலிதா நினைவு வருகிறது.
சொன்னதை செய்வோம்
எந்த நேரமும் உங்களுக்காக தமிழக மக்களுக்காக உழைக்கும் கட்சி தி.மு.க. தான். ஆனால் 3 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பயன்படக்கூடிய அளவில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் உறுதிமொழி கூறி நாங்கள் உங்களிடம் ஓட்டு கேட்கிறோம். அதனை நிறைவேற்றுவோம். சொன்னதை செய்வோம், சொல்வதைத்தான் செய்வோம்.
மக்களைப் பற்றி கவலையில்லை
ஆனால், ஜெயலலிதாவுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில், தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட சாதனை திட்டங்களை முடக்கியதுதான் அ.தி.மு.க.வின் சாதனை.
பொய் பிரசாரம்
இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று ஜெயலலிதா, கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாமல், தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
எம்.ஜி.ஆருக்கு துரோகம்
துரோகத்தைப் பற்றி ஜெயலலிதா கூறுகிறார். அவர் எம்.ஜி.ஆருக்கே துரோகம் செய்தவர். அவர் துரோகத்தைப் பற்றி பேசலாமா?
ஒரே மாதிரி ஏன் தளபதி?
ஜெயலலிதாவின் பேச்சுக்களுக்கு போகும் இடமெங்கும் பதிலடி தரும் மு.க.ஸ்டாலின், ஒரே மாதிரியாக எதையாவது செஞ்சீங்களா? என்னத்த செஞ்சி தொலைச்சீங்க? என்னத்த செஞ்சி கிழிச்சீங்க என்று கேட்பது எரிச்சலாக இருக்கிறதே மிஸ்டர் தளபதி.