போராட்டம், தடியடி எதிரொலி: சென்னை சட்டக் கல்லூரிக்கு 7 நாள் விடுமுறை! ஹாஸ்டலுக்கும் பூட்டு
சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் கல்லூரிக்கு 7 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மாற்றுவதை எதிர்த்து நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீஸார் தடியடியை கண்டித்து சட்ட மாணவர்கள் 200 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்ட மாணவர்களை தாக்கிய காவல் துறை அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சட்ட மாணவர்களை விடுவிக்கவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் அதிகாரிகள் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
போராடும் சட்ட மாணவர்களுக்கு சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் சட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு வழக்கறிஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினால், சட்டம்-ஒழுங்கில் பாதிப்பு ஏற்படலாம், மாணவர் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவலாம் என்ற அச்சத்தால், அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தையொட்டி, சட்டக் கல்லூரிக்கு 7 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. மாணவ, மாணவிகள் விடுதியும் மூடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications