ஸ்டெர்லைட் விவகாரம்.. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஜாமீனில் விடுதலை!
தூத்துக்குடி போராட்டக்கார்களுக்கு சட்ட உதவி செய்ததாக கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
நெல்லை: தூத்துக்குடி போராட்டக்கார்களுக்கு சட்ட உதவி செய்ததாக கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மே 22ஆம் தேதி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
பலர் காயம் அடைந்தனர். இக்கலவரத்தை சில அமைப்புகள் தூண்டிவிட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மக்கள் அதிகாரம் உட்பட சில அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியதாக மதுரை கேகே. நகரை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் தூத்துக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டார்
ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது உள்பட 9 வழக்குகளில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று ஜாமீன் வழங்கியது
இந்நிலையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வாஞ்சிநாதன் விடுதலை செய்யப்பட்டார்.