இந்தி கூடாது என்று கூறியவர்களின் குழந்தைகளும் இந்தி படித்துள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: தங்கள் குடும்பங்களை தாங்களே அழிக்க நினைப்பவர்கள்தான் இந்தி மொழியை படிக்க வேண்டாம் என அறிவுறுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்ற பிறகு இந்தி திணிப்பு அதிகமாக இருப்பதாகவும், முக்கிய சுற்றறிக்கை உள்ளிட்டவை கூட இந்தியில் அனுப்பப் படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாகர்கோவில் அருகே உள்ள தர்மபுரம் ஊராட்டி காற்றாடிதட்டில் உள்ள பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் உள்ள குழந்தைகள் கண்டிப்பாக இந்தி மொழியை படிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டம் 100 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாவட்டமாக இருந்தது. தற்போது கல்வி தரம் குறைந்து வருகிறது. கல்வியை மேம்படுத்தி சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றது முதலே குமரி மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சிகளுக்கும் பாடுபட்டு வருகிறேன்.
ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இளைஞர் வேலை வாய்ப்பை உருவாக்கிட பயிற்சி முகாம் குமரி மாவட்டத்தில் நடத்தப்படும். குளச்சல் துறைமுக பணிகளை செயல்படுத்த ஏற்கனவே முதல்-அமைச்சரை சந்தித்து பேசி உள்ளோம். மாநில அரசின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம்.
சுற்றுலா உள்பட அனைத்து வளர்ச்சிபணிகளும் குமரி மாவட்டத்தில் நிறைவேற்றப்படும். ரூ.140 கோடியில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, ரப்பர் பூங்கா அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளில் குமரி மாவட்டம் சிறந்த மாவட்டமாக மாற்றப்படும்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை இந்தி படிக்க வைக்க வேண்டும். இந்தி மொழியால் நான் படும் கஷ்டம் எனக்கு தான் தெரியும். இந்தி படிக்க கூடாது என்று கூறியவர்கள் கூட தங்கள் குழந்தைகளை இந்தி படிக்க வைத்துள்ளனர். தங்கள் குடும்பங்களை தாங்களே அழிக்க நினைப்பவர்கள் தான் இந்தி படிக்க வேண்டாம் என்பார்கள்.
இந்த பள்ளியில் இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்தி பாடத்தை கற்றுக்கொள்வது நல்லது ஆகும். எத்தனை மொழி தெரிந்து வைத்திருக்கிறோமோ அத்தனை நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.