ஜெயக்குமார் வீட்டில் நண்டு விட்டுப் போராடிய பெண்.. அடுத்து ஆமையை விடப் போறாராம்!
அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை: மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தி பெண் ஒருவர் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டருகே நண்டு விடும் போராட்டத்தை நடத்தினார். பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கூறுகையில் என்னோட பெயர் நர்மதா நந்தகுமார். ஆங்கிலத்தில் ஈஸ்ட் ஆர் வெஸ்ட் ஹோம் இஸ் தி பெஸ்டுனு சொல்லுவார்கள். அதாவது எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்பது அதன் பொருள்.
ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தினமும் தொலைகாட்சி சேனல்களில் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
மாநில அரசு
கடந்த டிசம்பர் மாதம் ஓகி புயலினால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கேரளத்தில் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு புயலினால் எத்தகைய பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாநில அரசு செய்துள்ளது.
முன்னேற்பாடு
தமிழக அரசு எவ்வித முன்னேற்பாடுகளை செய்யாததால் இந்த ஆண்டும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் உள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் ஏராளமான திட்டங்களை வெளியிடுகிறார், ஏராளமான நிதிகளை தமிழக அரசு ஒதுக்குகிறது. ஆனால் இந்த நிதிகள் முறையாக போய் சேர்க்கின்றனவா என்பது தெரியவில்லை.
நண்டு விடும் போராட்டம்
அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்த வேண்டும். நண்டு கூட பாதுகாப்பான இடத்தில் வாழ்கிறது. ஆனால் மீனவர்களோ இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே நண்டு போல் மீனவர்களும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக நான் நண்டு விடும் போராட்டம் நடத்தினேன்.
பெண் கைது
மீனவர்களுக்காக அறிவித்த திட்டங்களை அமைச்சர் ஜெயக்குமார் வேகமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நான் அடுத்தபடியாக ஆமை விடும் போராட்டம் நடத்தவுள்ளேன் என்றார். இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.