லீலாவதி கொலை: நன்னடத்தையில் விடுதலையான நல்லமருது மீண்டும் கைது - கலக்கத்தில் திமுக

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் மாமன்ற உறுப்பினர் லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்று நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்ட திமுக பிரமுகர் எஸ்ஸார் கோபியின் சகோதரர் நல்லமருது அவ்வழக்கில் மீண்டும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் திமுகவினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மதுரையில் மாமன்ற உறுப்பினர் லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்று நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்ட திமுக பிரமுகரின் சகோதரர் அவ்வழக்கில் மீண்டும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Leelavathi Killer Maruthu Back in Prison for Crimes

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் லீலாவதி. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த 1997-இல் மதுரை மாமன்ற உறுப்பினராக இருந்தார். தண்ணீர் பிரச்னை, ரேசன் கடைகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக திமுக பிரமுகர்களுக்கு எதிராக போராடி வந்தார்.

வெட்டிக்கொலை

1997ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி காலையில், பொருட்கள் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த லீலாவதியை, ஈவிரக்கமின்றி வெட்டிச் சாய்த்தது மர்மக் கும்பல். அந்தக் கொடூரச் சம்பவம் மதுரையை மட்டுமல்லாது தமிழகத்தையே உலுக்கியது. கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமல்லாது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7 பேர் கைது

அப்போது தி.மு.க ஆட்சிதான் நடைபெற்றது. எனினும் லீலாவதி கொலையில் தி.மு.கவைச் சேர்ந்த முத்துராமலிங்கம், மருது, சோங்கு முருகன், பாம்பு முருகன், மீனாட்சி சுந்தரம், அண்ணாதுரை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆயுள் தண்டனை

இதில் மருது, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரிக்கு நெருக்கமானவருமான எஸ்ஸார் கோபியின் சகோதரர் ஆவார். லீலாவதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 2003இல் ஆயுள் தண்டனை விதித்த மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அண்ணா நூற்றாண்டு விழா

கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நன்னடத்தைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது, மதுரை சிறையிலிருந்து மருது உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவு அப்போதைய ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டது.

விடுதலையானவர் கைது

லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவித்தது தொடர்பாக அப்போது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது மருது விடுதலை செய்யப்பட்ட உத்தரவை தமிழக ஆளுநர் ரத்து செய்துள்ளார். எனவே, அவரை மதுரை ஊரக போலீஸார் சனிக்கிழமை மீண்டும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

நன்னடத்தை விதி மீறல்

ஆயுள் தண்டனைக் கைதிகள் சில குறிப்பிட்ட நாளில் விடுவிக்கப்படும்போது, நன்னடத்தை விதியை மீறாமலிருக்க உறுதிமொழி அளிப்பார்கள். ஆனால், மருது மீது ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் என்பவரது கொலை வழக்கு உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. அதன்படி வழக்குகள் பதியப்பட்டன. இதையடுத்து அவரது விடுதலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அரசியல் பழிவாங்கல்

இதனிடையே இந்த கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என்று மருதுவின் சகோதரர் எஸ்ஸார் கோபி கூறியுள்ளார். அவர், தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்தார். என்ன காரணத்துக்காக மீண்டும் சிறையில் அடைத்தார்கள் என்று தெரியவில்லை. போலீஸ் சொல்லும் இரண்டு வழக்குகளும் ஜோடிக்கப்பட்டவை. ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில் அவர் குடும்பத்தினர் யாரும் புகார் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தினகரன் எரிப்பு வழக்கு

தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூன்று ஊழியர்கள் பலியான வழக்கில் குற்றவாளிகள் விடுதலையாகிவிட்டாலும், அதில் கொல்லப்பட்ட வினோத்தின் தாயார் மீண்டும் விசாரணை கேட்டு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இப்போது எடுத்திருக்கிறது. இதில் குற்றவாளிகள் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராக முன்வரவில்லை. அதனால் அவர்களுக்கு இலவச சட்ட உதவி மையம் உதவ வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூசி தட்டப்படும் வழக்குகள்

தேர்தல் நெருங்கும் நிலையில் லீலாவதி கொலைவழக்கு, தினகரன் எரிப்பு வழக்கு என திமுகவினர் தொடர்புடைய வழக்குகள் மீண்டும் தூசி தட்டப்படுவதால் திமுகவினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+