அதிமுக வேட்பாளர் அறிவிப்பு... எங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு அல்ல: தா. பா.

சென்னையில் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். மேலும் இடதுசாரிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கான தொகுதிகள் முடிவானதும் அந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவர் என்றும் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதனால் இடதுசாரிகளுக்கு தொகுதிகள் கிடைக்குமா? எத்தனை தொகுதிகள்தான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது? இடதுசாரிகள் அதிருப்தியில் இருக்கின்றனரா என்ற கேள்விகள் எழுந்தன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன். கடந்த சட்டசபை தேர்தலின்போதும் அதிமுகவுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் தொகுதிப் பங்கீட்டின்போது இப்படியான நிலை ஏற்பட்டது.
ஆனால் ஆரம்பகட்ட சிக்களையும் தாண்டி இறுதியில் தொகுதிப் பங்கீட்டு பிரச்சனைகள் சுமுகமாக பேசித் தீர்க்கப்பட்டது. அதைப்போலவே இப்போதும் அதிமுக மற்றும் இடதுசாரிகளுக்கு இடையிலான தொகுதிப்பங்கீடு சுமுகமாக முடிவுக்கு வரும். தமிழ்நாட்டில் இடதுசாரிகள் அடங்கிய அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதிமுகவின் இந்த முடிவு எங்களின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு அல்ல என்றார்.
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வரதராஜன் கூறுகையில்,, அதிமுகவுடனான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்களுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இரு கட்சித் தலைமைகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அந்த தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என முழு நம்பிக்கை இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications