லிங்கா நஷ்டம்: ரஜினியிடம் புகார் தரப் போகிறோம், பாதுகாப்பு தேவை - கமிஷனரிடம் விநியோகஸ்தர்கள் மனு
சென்னை: லிங்கா படம் சரியாக ஓடாததால் திங்கட்கிழமை ரஜினியை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அப்போது எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திரைப்பட விநியோகஸ்தர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
திரைப்பட விநியோகஸ்தர்கள் சனிக்கிழமை மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா' திரைப்படத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வெளியிட்டுள்ளோம். ஆனால் சரியாக வசூலாகவில்லை. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவில் இத்திரைப்படத்தை ரூ.4.20 கோடி கொடுத்து வாங்கினோம். ஆனால் இதுவரை ரூ.1.50 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதே நிலைமை தான் பல ஏரியாக்களில் நிலவுகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் எங்களை நெருக்குகின்றனர்.
இது தொடர்பாக 22-ம் தேதி (நாளை) ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம். அன்றைய தினம் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பலர் வருகின்றனர். அதனால் உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications