லிங்கா நஷ்ட ஈடு உண்ணாவிரதம்... சீமான் தொடங்கி வைத்தார்.. வேல் முருகன் முடித்து வைக்கிறார்!
லிங்கா படத்தால் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதை ஈடு கட்ட வேண்டும் என்று கோரியும் சில மீடியேட்டர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இந்த உண்ணாவிரதத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி வைத்தார். மாலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் பண்ருட்டி வேல்முருகன் முடித்து வைக்கிறார்.
இதன் மூலம் லிங்கா என்ற திரைப்படத்தின் பிரச்சினை சினிமாவைத் தாண்டி முழுக்க அரசியல் பின்னணி கொண்ட, ரஜினிக்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் என மீடியா சொல்லி வந்தது நிரூபணமாகியுள்ளது.
நேற்று சீமானையும் பண்ருட்டி வேல்முருகனையும் அவர்களின் வீடுகளுக்குப் போய் சந்தித்து இந்த உண்ணாவிரதத்துக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களும் வர ஒப்புக் கொண்டனர்.
இன்று காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார் சீமான். மாலையில் வேல்முருகன் முடித்து வைக்கிறார்.
ஏற்கெனவே லிங்கா பிரச்சினையை தமிழர் - கன்னடர் பிரச்சினையாக மாற்றி பிரச்சாரம் செய்து வந்தார் இந்த மீடியேட்டர்களுக்கு தலைமை தாங்கி வரும் சிங்கார வேலன் என்பவர். இந்த நிலையில் இப்போது நாம் தமிழர் கட்சியின் சீமானும், பண்ருட்டி வேல்முருகனும் இந்தப் பிரச்சினையில் தங்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.