தஞ்சையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையில் மது விற்பனை... மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனை செய்ததாக கூறி டாஸ்மாக் மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலின் போது தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அதிமுக அரசு அறிவித்திருந்தது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. அதன்படி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும், டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டது.

இதேபோல தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் கிராமத்தில் இருந்த 3 டாஸ்மாக் கடைகளில் ஒரு கடையை மாவட்ட நிர்வாகம் மூடியது. 2 நாட்கள் மட்டுமே அந்த கடை மூடப்பட்டிருந்த நிலையில் 3-வது நாளில் இருந்து அந்த கடைவழக்கம் போல திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றதாக புகார் எழுந்தது. மேலும், மூடுவதற்கு உத்தரவிடப்பட்ட அந்த கடைக்கு மதுபான வகைகள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி மண்டல மேலாளர் உதயகுமார், சாலியமங்கலம் கிராமத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறந்து வியாபாரம் செய்ததாக கூறி டாஸ்மாக் மேற்பார்வையாளர் அறிவழகன் மற்றும் 3 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications