செவ்வாய் கிழமை குரு ஓரையில் 919 அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல்
சென்னை: எந்த ஒரு காரியம் செய்வதற்கும் நல்ல நாள், நேரம் பார்த்துதான் முதல்வர் ஜெயலலிதா தொடங்குவார். தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஒட்டுமொத்தமாக தேய்பிறை செவ்வாய்கிழமையான இன்று பிற்பகல் 12 மணிமுதல் 1 மணிவரை குரு ஓரையில் தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னையில் பாலகங்கா, ஜேசிடி பிரபாகர், திருச்சியில் சாருபாலா தொண்டைமான், மதுரையில் சண்முகவள்ளி, சேலத்தில் மேயர் சவுண்டப்பன் ஆகிய முக்கிய வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக, அக்.17ம் தேதி நகர்ப்புறங்களில் 10 மாநகராட்சிகள், 64 நகராட்சிகள், 255 பேரூராட்சிகள், ஊரக பகுதிகளில் 193 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 332 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3250 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 50,640 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கும், 6444 கிராம ஊராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்டமாக, அக். 19ம் தேதி சென்னை, திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 273 பேரூராட்சிகள், ஊரக பகுதிகளில் 195 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 322 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3221 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 48,684 கிராம ஊராட்சி வார்டுகள், 6080 கிராம ஊராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக உள்ளாட்சிகளில் 1,18,974 பதவிகள், நகர்ப்புற உள்ளாட்சியில் 12,820 பதவிகள் என மொத்தம் 1,31,794 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மட்டும், 4,748 பேர் தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் பலரும் சுயேச்சையாக போட்டியிடுபவர்கள்.
சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சி மற்றும் 31 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இந்த வேட்பாளர்கள் அனைவரும் இன்று தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
வருகிற 3ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள். தினமும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
வேட்புமனுக்கள் 4ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 6ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுவை திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தவிர வேறு எந்த எதிர்கட்சியினரும் இதுவரை வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 200 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களில் அம்பத்தூரில் ஜேசிடி பிரபாகரும், அயனாவரத்தில் பாலகங்காவும் தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
மதுரையில் அதிமுக வேட்பாளர் சண்முக வள்ளி வேட்புமனு தாக்கல் செய்தார். தூத்துக்குடியில் துணை மேயர் சேவியர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருப்பூரில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். திருச்சியில் சாருபாலா தொண்டைமான் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சேலத்தில் மேயர் சவுண்டப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் கட்சித்தலைமை குறித்துக் கொடுத்த நல்ல நேரத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய சவுண்டப்பன், அம்மா எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார் கோடானு கோடி நன்றி என்று கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகித வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
ஏகாதசி நாளில் நேற்று வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்த ஜெயலலிதா, துவாதசி நாளான இன்று வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். 919 அதிமுக வேட்பாளர்களும் தேய்பிறை செவ்வாய்கிழமையான இன்று குரு ஓரையில் தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications