உள்ளாட்சி தேர்தல்: விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கோரிய பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கோரி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜக தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதையடுத்து வரும் 18ம் தேதி நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது என்று பாஜக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.
அங்கு அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமாறு அவரை கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமாறு விஜயகாந்திடம் கேட்டோம். கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தனது முடிவை ஓரிரு நாட்களில் தெரிவிப்பதாக கூறினார். மேலும் பாமக தலைவர்களை சந்திக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களும் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறோம் என்றார்.
முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழிசை ஆதரவு கோரினார். வைகோவும் உள்ளாட்சி தேர்தலில் தனது ஆதரவு பாஜகவுக்கு என்று தெரிவித்துள்ளார்.