மார்ச் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசு ஆணையிட்டிருக்கிறது. இன்றைய நிலையில் இது தவிர்க்க முடியாதது என்றாலும், சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணையின்படி டிசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் நலப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தனி அதிகாரி பல உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க வேண்டியிருப்பதால் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து அவர்களால் உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வார்தா புயல் பாதிப்புகளை இன்னும் விரைவாக சரிசெய்திருக்க முடியும். தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தால் குடிநீர் பஞ்சம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வுகாண முடியும். இப்போது ஒவ்வொரு பணிக்கும் அதிகாரிகள் மேலிடத்தின் ஒப்புதலை வாங்க வேண்டியிருப்பதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டும் தான் உள்ளாட்சித் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும்; எந்திரத்தனமாக ஒத்திவைக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டும், பல ஐகோர்ட்டுகளும் தீர்ப்பு அளித்துள்ளன. ஆனால், அத்தீர்ப்புகள் தமிழகத்தில் மதிக்கப்படவில்லை. மேலும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
73-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி மாநில தேர்தல் ஆணையங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் ஆளுங்கட்சி தலையீடு இல்லாமல் மாநிலத் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட முடியும். அத்தகைய சூழலில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையரை செய்யப்பட்டிருக்கும் என்பதால் இத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது.
உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களின் தேவைகளை அவர்களே நிறைவேற்றிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அதிகாரிகள் ஆட்சி செய்ய ஏற்படுத்தப்படவில்லை. இதை உணர்ந்து மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, மாநிலத் தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்களின் தலையீடின்றி செயல்பட வசதியாக அவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துடன் தமிழக அரசு இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications