பனிமய மாதா ஆலய திருவிழா: தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
தூத்துக்குடி: தூத்துக்குடியிலுள்ள புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த மாதம் 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அன்னையின் பவனி நடைபெறுவதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தூய பனி மய மாதா ஆலயத்தின் 432ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 26ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

திருவிழாவை தொடர்ந்து நாள்தோறும் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி, இரவு ஜெப மாலை, நற்கருணை ஆசீரும் நடந்துவருகிறது. ஆகஸ்ட் 5ம் தேதியான இன்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமை யில் பெருவிழா கூட்டுத் திருப்பலி, மதியம் 12 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் பர்ணான்டோ தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடந்தது.
மாலை 5.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மைகுரு செல்வராசு அடிகளார் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப்பவனி, இரவு 10 மணிக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், நற்கருணை ஆசீர் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் இன்றுதான் நடைபெறும் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ரவிக்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 6ம் தேதியான நாளை, காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலி, 6.30 மணிக்கு 2ம் திருப்பலி, அதனைத்தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications