தேமுதிகவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடக்கவில்லை: கருணாநிதி

மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கருணாநிதியை இன்று சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, திமுக கூட்டணியில் தே.மு.தி.கவும் இணைய வேண்டும் என்றும், விஜயகாந்தை அழைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: தமிழ்நாட்டில் ராஜ்யசபா எம்பிக்கள் 6 பேர் பதவி காலம் முடிவடைவதால், பிப்ரவரி 7ம் தேதி தேர்தல் வருகிறது. திமுக உறுப்பினர்கள் இரண்டு பேர்களின் பதவிக் காலமும் முடிவடைகிறது. அந்தத் தேர்தலில் திமுக போட்டியிடுமா?
கருணாநிதி: அதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
கேள்வி: திமுக, தே.மு.தி.க. கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை நடந்திருக்கிறதா? பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கிறதா?
கருணாநிதி: பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை, அதனால் முன்னேற்றம் என்ற கேள்விக்கு இடமில்லை.
கேள்வி: சென்னையில் ரயிலில் பயணம் செய்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணியிடமே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதே; தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படியுள்ளது?
கருணாநிதி: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால் அல்லவா அதைப் பற்றி பேச முடியும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
ஸ்டாலினும் கருத்து:
முன்னதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க. கூட்டணியில் வந்து சேருமாறு தே.மு.தி.கவுக்கு கருணாநிதி வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். தே.மு.தி.க. எங்கள் பக்கம் வந்தால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு திருமணத்துக்கு அழைக்கவே விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். நாங்கள் அவரை விஜயகாந்துடன் சந்திக்க சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications