தங்கப்பல்லாக்கில் மதுரை வந்து பூப்பல்லாக்கில் மலைக்கு புறப்பட்ட அழகர்: பக்தர்கள் பிரியாவிடை
மதுரை: சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், வைகை ஆற்றில் இறங்குவதற்காக தங்கப்பல்லாக்கில் மதுரை வந்த கள்ளழகர், இன்று அதிகாலையில் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தவாரே தன் இருப்பிடமான அழகர் மலைக்கு புறப்பட்டார். பக்தர்கள் அழகருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 20 ம் தேதி அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மதுரை வந்தார் கள்ளழகர். 21ம் தேதி எதிர்சேவை நடைபெற்றது. இதையடுத்து 22ம் தேதி காலையில் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமையன்று காலையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த அழகர், அன்றிரவு ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளி சுந்தரராஜப் பெருமான் முத்தங்கி, மச்சம், கூர்மம், வாமனம், ராமர், கிருஷ்ணர் மற்றும் மோகினி அவதாரங்களான, தசாவதாரக் காட்சிகளில் சேவை சாதித்தார். விடிய விடிய நடைபெற்ற இந்த தசாவதாரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்தனர்.
ஞாயிறன்று காலை ராமராயர் மண்டகப்படியிலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் சுந்தரராஜப் பெருமான் புறப்பாடாகி வைகை ஆற்று திருக்கண் மண்டகப்படியில் மாலை 3.45 மணிக்கு எழுந்தருளினார். பின் கோரிப்பாளையம் வழியாக தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோயில் அருகேயுள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார்.
திங்கட்கிழமையன்று அதிகாலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, பூப்பல்லாக்கில் தன் இருப்பிடமான அழகர் மலையை நோக்கிப் புறப்பட்டார் கள்ளழகர். தல்லாகுளம் பெருமாள் கோயில், அம்பலகாரர் மண்டகப்படி என வந்த வழியிலேயே மீண்டும் எழுந்தருளியவாறு மூன்றுமாவடி சென்ற அவருக்கு பக்தர்கள் வழியனுப்பும் பூஜையில் ஈடுபட்டனர். பின் அங்கிருந்து அழகர்மலைக்கு புறப்பாடானார்!