140 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் தப்பியோட்டம்
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே நள்ளிரவில் காய்கறி மூட்டைகளுடன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. அப்போது அரிசியை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததால் டிரைவர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து நாகர்கோவில் நோக்கி காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு மினி லாரி ஒன்று புறப்பட்டுச் சென்றது. இடைசெவல் நான்குவழி சாலையில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

அப்போது லாரியில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 140 ரேஷன் அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன. காய்கறிகளும் ரோட்டில் சிதறின.
காய்கறி மூட்டைகளுடன் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரி கவிழ்ந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் நாலாட்டின் போலீஸ்
இன்ஸ்பெக்டர் பொன்னரசு, உணவு பாதுகாப்பு ஆய்வாளர் வனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் மற்றும் அதில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து சாலையில் கிடந்த ரேஷன் அரிசியை மூட்டைகளில் அடைத்த உணவு பாதுகாப்பு அலுவலர் வனசுந்தரம் அவற்றை தூத்துக்குடி அரசு உணவு கிடங்குக்கு அனுப்பி வைத்தார். நாலாட்டின்புதூர் போலீசார் லாரியை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் அதில் வந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications