மோட்டார் பைக் மீது மணல் லாரி மோதி 3 குழந்தைகள் உட்பட 4பேர் சாவு: தூத்துக்குடி அருகே சோகம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதிய விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோபமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள குளத்தூரில் இன்று மாலை சந்திரசேகரன் என்பவர், டிவிஎஸ்-50 வகை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த மணல் லாரி அந்த பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் இருந்த தனியார் பள்ளி குழந்தைகள் 3 பேரும், சந்திரசேகரனும் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதாக கூறி குற்றம்சாட்டிய பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. மாவட்ட எஸ்.பி துரை தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனர்.