ராமேஸ்வரத்தில் தோண்ட தோண்ட பழமையான துப்பாக்கி, தோட்டாக்கள் கண்டெடுப்பு... பரபர பின்னணி என்ன?
ராமேஸ்வரத்தில் தோண்ட தோண்ட பழமையான துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கழிவுநீர் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் தோண்ட தோண்ட பழமையான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அருகே அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் எடிசன். இவருடைய வீட்டின் பின்புறம் கழிவு நீர் தொட்டிக்காக பள்ளம் தோண்டும் போது பணிகள் நேற்று நடைபெற்றன.
அப்போது 3 அடி ஆழத்தில் தோண்டிய போது ஒரு இரும்புப் பெட்டி கிடைத்தது. இது புதையலாக இருக்கும் என சந்தேகித்த எடிசன் போலீஸாரிடம் தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து ஆய்வு நடத்தினர்.

15 கையெறி குண்டுகள்
அப்போது மேலும் தோண்டி இரும்பு பெட்டியை வெளியே எடுத்தனர். அதில் இலகு ரக எந்திர துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 19 தோட்டா கொண்ட பெட்டிகள் இருந்தன. தலா ஒரு பெட்டியில் 250 தோட்டாக்கள் கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் மேலும் தோண்டியபோது 5 கண்ணி வெடிகள் பெட்டிகள், 15 கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர் தோட்டக்கள் 2 பெட்டிகள் என இருந்தன.

35 ஆண்டுகளுக்கு முந்தையது
மொத்தம் 50 பெட்டிகளில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தோண்ட தோண்ட பூதம் கிளம்புவது போல் பெட்டிகள் வந்து கொண்டே இருப்பதால் போலீஸார் அந்த இடத்தில் மேலும் தோண்டி வருகின்றனர். இங்கு கிடைத்திருக்கும் ஆயுதங்கள், தோட்டாக்கள் 35 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போர்
கிடைத்த பெட்டிகள், குண்டுகள், தோட்டாக்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். அது வந்த பிறகே மற்ற விவரங்கள் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். இலங்கையில் 1983-இல் ராணுவத்துக்கு விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்றது.

பதுக்கியிருக்கலாம்
அப்போது ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டன. அந்த சமயத்தில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் 14 இடங்களில் இலங்கை போராளிகள் முகாம்கள் அமைக்கப்பட்டன. அப்போது இந்த துப்பாக்கித் தோட்டாக்கள், குண்டுகள், வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications