வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் ... தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்து வருகிறது.
தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாகவும், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் சில நாள்களாக மழை பெய்து வந்தது.
தமிழகத்தை வாட்டி வதைத்து வந்த வெப்பத்தின் தாக்கம் தற்போது முழுவதுமாக குறைந்துள்ளது. குளிர்ந்த காற்றும், சாரல் மழையும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் மழை
சனிக்கிழமை காலை நிலவரப்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்திலும், கூடலூர் பஜார் பகுதியிலும் 30 மி.மீ. மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகிய இடங்களில் 20 மி.மீ. மழையும் பதிவானது. இதனிடைய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குறைந்த காற்றழுத்தம்
வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் மேகமூட்டம்
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும்.

மழை அளவு
அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கூடலூர், திருவள்ளூர், செம்பரப்பாக்கத்தில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications