தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியது.. கன மழை பெய்யும்.. சொல்கிறார் ரமணன்
சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்ககடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது.
காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது. என்றாலும் மேல் அடுக்கு சுழற்சியில் காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதால் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே இருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தின் நாகை, திருவாரூர் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
புயல்சின்னம்
இதற்கிடையே இன்று காலை 8.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாறியது. தற்போது சென்னையில் இருந்து தென்கிழக்கில் 530 கி.மீ தொலைவிலும், இலங்கை திரிகோண மலையில் இருந்து வட கிழக்கில் 350கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது அதிவேக புயலாக மாறும். மேலும் புயல் சின்னமானது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி மெதுவாக நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அனேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை அளவு
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 7செ.மீ. மழையும், நாகையில் 5செ.மீ. மழையும், காரைக்காலில் 3செ.மீ., திருத்துறைப் பூண்டியில் 2செ.மீ. வேதாரண்யம், திருவாரூரில் தலா 1செ.மீ. மழையும் பெய்துள்ளது.
புயல் எச்சரிக்கை
சென்னை, கடலூர், நாகபட்டினம் துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூர், காட்டுப் பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.