ஆர்கே நகரில் நாம் தமிழர் கட்சி செம.. பாஜக நிலைமை படு மோசம்... லயோலா மாஜி மாணவர்கள் சர்வே!
ஆர்கே நகரில் நாம் தமிழர் கட்சியை விட பாஜகவின் நிலைமை மோசமாக இருப்பதாக லயோலா கல்லூரி மாஜி மாணவர்களின் சர்வே சொல்கிறது.
சென்னை : ஆர் கே நகர் இடைத்தேர்தலில் எந்தெந்த கட்சிகளுக்கு வாக்களிக்க மக்கள் விரும்புகிறார்கள் என்று லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். அதில் தேசிய கட்சியான பாஜகவைவிட நாம் தமிழர் கட்சிக்கு அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆர்கே நகர் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தீர்மானிக்க முடியாத நிலையில் இருக்கும் தேர்தல் வெற்றி குறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் பண்பாடு மக்கள் தொடர்பகம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. ஆர்கே நகர் மக்களின் ஓட்டுகள் யாருக்கு, எந்த கட்சிக்கு மக்களின் ஆதரவு என்பன உள்ளிட்ட பல கேள்விகள் இதில் கேட்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகான அதிமுக ஆட்சியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள். அதிமுக ஆட்சி அதிகாரத்தில் பாஜகவின் தலையீடு எப்படி என்பன உள்ளிட்ட நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் கருத்து கேட்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

எந்த கட்சிக்கு வாக்கு?
இதன்படி தமிழகத்தின தற்போதைய அரசியல் சூழலின் பின்னணியில் இன்று ஆர்கே நகர் மக்கள் வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று ஆர்கே நகர் வாக்காளர்களிடம் சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதில் திமுகவிற்கு வாக்களிப்போம் என்று 33 சதவீதம் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பாஜகவிற்கு ஆதரவு எப்படி?
திமுகவிற்கு அடுத்தபடியாக தினகரனுக்கு ஆதரவாக 28 சதவீதம் பேரும், ஆளும் கட்சியான அதிமுகவிற்கு 26 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் தாமரை மலரும் என்ற நம்பிக்கையோடு களமிறங்கி இருக்கும் பாஜகவிற்கோ 1.23 சதவீதம் மக்கள் மட்டுமே வாக்களிப்போம் என்று கூறியுள்ளதொக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாம் தமிழர் கட்சிக்கு 2.18 %
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 2.18 சதவீதம் பேர் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். இதே போன்று நோட்டாவிற்கு 5.59 சதவீதம் பேர் வாக்களிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாஜகவைவிட நாம் தமிழர் பெஸ்ட்
இந்த கருத்துக்கணிப்பு முடிவில் குறிப்பிட்டு பார்க்கும் படியான விஷயமாக இருப்பது, தேசிய கட்சியான பாஜகவைவிட நாம் தமிழர் கட்சிக்கு அதிகம் பேர் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். இரு கட்சிகளிடையே சுமார் 1 சதவீதம் வித்தியாசம் இருக்கிறது. வடகிழக்குப் பருவமழையின் போது நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்ததும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications