அதிமுக- மார்க்சிஸ்ட் கூட்டணி: பிரகாஷ் காரத் சந்திப்புக்குப் பின் ஜெ. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அதிகாப்பூர்வமாக இன்று அறிவித்தார்.
லோக்சபா தேர்தலில் வியூகம் வகுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பரதன், சுதகார் ரெட்டி, தா. பாண்டியன் ஆகியோர் சந்தித்தனர்.

அதிமுக- இ.கம்யூ கூட்டணி
இந்த சந்திப்பின் பின்னர் அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்திருப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். மேலும் தேர்தல் கூட்டணி முழக்கத்தையும் ஜெயலலிதா வெளியிட்டார்.

ஜெ.தான் பிரதமர்- பரதன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி. பரதனும், அதிமுக அணி அதிக இடங்களில் வென்றால் ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு உள்ளது என்றார்.

போயஸ் கார்டனில் பிரகாஷ் காரத், ஜி.ஆர்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

அதிமுக- மார்க்சிஸ்ட் கூட்டணி: ஜெ.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெறுவது பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.

பிரதமர் பற்றி இப்போது பேசுவதில் அர்த்தமில்லை
மேலும், அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றி இப்போது பேசுவதில் அர்த்தமில்லை என்றும் ஜெயலலிதா கூறினார்.

அதிக இடங்களில் வெல்வோம்- பிரகாஷ் காரத்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications