டெங்கு நாடாக மாறி விட்டது தமிழகம்.. மு.க.ஸ்டாலின் சாடல்!
தமிழகம் டெங்கு நாடாக மாறி விட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
சென்னை : தனியார் மருத்துவமனைகள் டெங்கு மரணத்தை அறிவிக்கக் கூடாது என்று தமிழக அரசு மிரட்டல் விடுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : தமிழகம் டெங்கு மாநிலமாக மாறி வருகிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 56 குழந்தைகள் காய்ச்சலுக்கு சிகிச்சை, இவர்களில் 24 பேர் டெங்குவால் பாதிப்பு உள்ளது. இதே போன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 39 கர்ப்பிணிப் பெண்களில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நகராட்சி, மாநகராட்சிகள் முறையாக நடவடிக்கை எடுக்காததால் மோசமான நிலைக்கு தமிழகம் சென்றுள்ளது. பேருக்கு டெங்கு குறித்து மத்திய அரசு ஆய்வி செய்து சென்றுள்ளது. தமிழகம் வந்த மத்திய குழு டெங்கு என்பது சாதாரண விஷயம் தான் இதற்கு மாநில, மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளது. டெங்குவிற்கு 40 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக மத்திய குழுவினர் கூறுவது வியப்பளிக்கிறது.

டெங்குவால் உயிரிழக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோரை அதிகாரிகள் இழிவபடுத்துகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் டெங்குவால் உயிரிழந்தார்கள் என அறிவிக்கக் கூடாது என அரசு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கிறது. மீறி டெங்கு மரணம் என்று அறிவித்தால் அங்கீகாரம் ரத்தாகும் என்று அரசு மிரட்டுகிறது. டெங்கு மரணங்கள் பற்றி கவலைப்படாமல் ஆடம்பர விழா எடுப்பதிலேயே அரசு கவனமாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவர் கூட டெங்குவால் உயிரிழக்கவில்லை என்று அமைச்சர் சீனிவாசன் கூறுகிறார். என்னிடம் பழனி மருத்துவமனையின் அறிக்கை உள்ளது. அங்கு டெங்கு காய்ச்சலுக்கு சில குழந்தைகளும், 7 வயது பெண் குழந்தையும் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை அறிக்கையே உள்ளது.

உண்மை நிலை இப்படி இருக்க டெங்குவால் மரணங்களே இல்லை என்று அரசு அனைத்தையும் மூடி மறைக்கிறது. தயவு செய்து மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே டெங்குவிற்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய குழு உண்மையிலேயே டெங்கு பாதிப்பு எங்கே இருக்கிறதோ அங்கு சென்று மத்தியக் குழு ஆய்வு செய்யவில்லை. நிலவேம்பு கஷாயத்தை டெங்கு காய்ச்சலுக்கு எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று தமிழக சுகாதாரத்துறை தான் விளக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications