ஆட்சியை கலைக்காத திமுக மீதுதான் மக்களுக்கு அதிக கோபம் - மு.க.ஸ்டாலின்
நீலகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஈபிஎஸ் அரசு மீதுள்ள கோபத்தை விட அரசை கலைக்கவில்லை என மக்களுக்கு திமுக மீதுதான் கோபம் அதிகம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நீலகிரி: ஈபிஎஸ் அரசு மீதுள்ள கோபத்தை விட, அந்த அரசை கலைக்கவில்லை என திமுக மீதுதான் மக்கள் அதிக கோபத்துடன் உள்ளார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீலகிரியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஆளுங்கட்சியான எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதுள்ள கோபத்தை விட, மக்கலூக்கு திமுக மீதுதான் அதிக கோபம். ஆட்சியை திமுக கலைக்கவில்லை என்று மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர்.
போராட்டங்களை கண்டுகொள்ளாத அரசு
நெடுவாசல், கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழர்களின் ஒரே பாதுகாப்பாக திமுகதான் இருக்கிறது.
மருத்துவ குறிப்புகள் இல்லையே ஏன்?
அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த போது அரசு சார்பில் மருத்துவக் குறிப்புகள் வெளியாகின. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற போது அரசு சார்பில் மருத்துவக் குறிப்புகள் ஏன் வெளியிடப்படவில்லை? மேலும், ஜெயலலிதா உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு நன்கு தெரியும். ஆகையால் தான் அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை பார்க்கவில்லை என குற்றம்சாட்டிய ஸ்டாலின், திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஜெயலலிதா கைரேகையும் கையெழுத்தும் பொய்.
மத்திய அரசுக்கு நன்கு தெரியும்
ஜெயலலிதா உடல்நிலை குறித்து மத்திய அரசுக்கு நன்கு தெரியும். ஜெயலலிதா உடல்நிலையை முன்கூட்டியே அறிந்திருந்ததால்தான் பிரதமர் மோடி அப்பல்லோவுக்கு வரவில்லை.
புதிய ஆளுநர் நியமனம் இதற்குதானா?
ஜெயலலிதா மரணம் குறித்த உண்மைகளை மறைக்கவே புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.