ரூ.570 கோடி பணம் பறிமுதல்.. உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்: ஸ்டாலின்
கரூர்: திருப்பூரில் ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து உச்சநீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியை ஆதரித்து ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வேலாயுதபாளையத்தில் அவர் பேசுகையில், திருப்பூரில் 570 கோடி ரூபாயை கொண்டு சென்ற மூன்று கன்டெய்னர்களை கைப்பற்றியதாக செய்தி வெளியாகி உள்ளது.

அதையும் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளோ, தமிழக பறக்கும் படை அதிகாரிகளோ நிறுத்திப் பிடிக்கவில்லை. வெளி மாநிலத்திலிருந்து பார்வையாளராக வந்திருந்த ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியும், ஒரு வெளி மாநில தேர்தல் பார்வையாளரும் பிடித்திருக்கிறார்கள்.
கரூரையும், கண்டெய்னரையும்" மூடி மறைக்க திட்டமிட்ட சதி நடக்கிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆகவே "கரூர் அன்புநாதன் பணம் பறிமுதல்" குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல் 570 கோடி ரூபாய் திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார்.
மேலும், 500 கோடியா இல்லை 5000 கோடியா என்ற உண்மை மக்களுக்கு தெரிந்தாக வேண்டும். இந்த 570 கோடியும் பாரத ஸ்டேட் வங்கியின் பணம் என்பதற்கான எந்த விதமான வெளிப்படையான உண்மைகளும் இதுவரை வெளிவரவில்லை என்பது உள்ளபடியே அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது என்று ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications