ஓபிஎஸ், சசிகலா அணி ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள்: மு.க.ஸ்டாலின் தாக்கு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின், பன்னீர்செல்வம், சசிகலா தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
சென்னை: ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் ஒரே குட்டையில் அதுவும், ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 12- ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது திருவொற்றியூரில் வணிகர்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக எம்எல்ஏக்கள் தொகுதி மக்களை தொடர்ந்து சந்திக்க வேண்டும் என கட்டளை இடப்பட்டுள்ளது. மருது கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆர்.கே.நகர் தொகுதி எனது கண்காணிப்பில் இருக்கும். வணிகர்களுக்கு அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வணிகர்களின் நலன் காக்கும் வகையில் மருதுகணேஷ் செயல்படுவார் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மக்களைப்பற்றி கவலைப்படாமல் பதவியையே குறிக்கோளாக கொண்டவர் பன்னீர்செல்வம் என்றும் பதவி போன பிறகே ஜெயலலிதா மரணம் குறித்து பன்னீர்செல்வத்திற்கு சந்தேகம் வந்தது என தெரிவித்த அவர், முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
மணல் மாஃபியா அணியும், ஃபெரா மாஃபியா அணியும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது இரட்டை இலை சின்னம் யாருக்கு? அந்தக் கட்சி யாருக்கு? என்ற போட்டியில் தானே தவிர மக்களுக்காக இல்லை என குற்றம்சாட்டி ஸ்டாலின், ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் ஒரே குட்டையில் அதுவும்- ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும், அவர்கள் போடக்கூடிய வேடங்களை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications