பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் கொடுங்கரங்களாக ஆட்சியாளர்கள் மாறிடக் கூடாது: ஸ்டாலின்
உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் கொடுங்கரங்களாக ஆட்சியாளர்கள் மாறிவிடக் கூடாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத் துறை சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் செயல்பட்டால்தான் மக்களுக்கு உண்மைகள் சென்று சேரும்.

ஊடக சுதந்திர நாளில் இதனை நினைவூட்ட விரும்புகிறேன். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் கருணாநிதியின் வழிகாட்டுதலில் நடைபோடும் திமுக சார்பில் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு அஞ்சாமல், நிறை-குறைகளை சரியாக எடைபோட்டு, நேரங்காலம் பார்க்காமல் மக்கள் நலன் சார்ந்த செய்திகளை எடுத்துரைக்கும் பெரும்பணியினை பத்திரிகையாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் கொடுங்கரங்களாக ஆட்சியாளர்கள் மாறிவிடக்கூடாது என்பதுதான் இந்த நாளில் நினைவுகொள்ள வேண்டிய செய்தியாகும்.
அதிகார வர்க்கத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டு, ஜனநாயகக்காற்றை தொடர்ந்து வீசச் செய்யும் போராட்டத்தை பேனா என்ற ஆயுதத்தின் மூலம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த அறிவாயுதம் நடுநிலை தவறாமல் செயல்பட்டு எளிய மக்களின் நண்பனாகத் திகழ வாழ்த்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications