ஓ.பன்னீர் செல்வத்துடன் ஸ்டாலின் சந்திப்பு... அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கோரிக்கை #mkstalin
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஸ்டாலினுடன் பொன்முடி, துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். சட்டசபை சிறப்புக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்த நிரையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். மேலும் சட்டமன்றத்தை கூட்டி அவசர மற்றும் சிறப்பு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். விவசாய சங்க பிரதிநிதிகளை கூட்டிக் கொண்டு டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை, முடிந்தால் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த தீர்மானங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மு.க.ஸ்டாலின் உடன் திமுக எம்.எல்.ஏக்கள் பொன்முடி, துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருப்பதால் அவரது பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்றார்.