ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிய ஐ.நா கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை.. ஸ்டாலின் பரபர விளக்கம்
ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இதுகுறித்து அவர் விரிவான கடிதத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு எழுதியுள்ளார்.
சென்னை: சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதால் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் ஜூன் 12ம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இம்மாதம் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள 35வது மனித உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தில் ஈழ மக்களின் பிரச்சினைகள், விடுதலைக்கான தீர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் உரையாற்றச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் "தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கு எனது மனப்பூர்வமான வருத்தங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்தக் கடிதத்தில் ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை ராணுவம் செய்த போர்க்குற்றங்களை சர்வ தேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.