தமிழ்த் தொண்டாற்றிய பொள்ளாட்சி மகாலிங்கத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: ஸ்டாலின் இரங்கல்
சென்னை: தொழிலதிபராகவும், ஆன்மீகவாதியாகவும் மட்டுமல்லாமல், தமிழ் மொழிக்கும் அரும் தொண்டாற்றிய பொள்ளாட்சி மகாலிங்கத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என தனது இரங்கல் செய்தியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக சேவகரும், 'சக்தி' குழும நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் பொள்ளாச்சி மகாலிங்கம், திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91. சென்னையில் நடைபெற்றா விழா ஒன்றில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த மகாலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் பொள்ளாச்சி மகாலிங்கம். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பொள்ளாச்சி மகாலிங்கம் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
காலமான பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு, மாரியம்மாள் என்ற மனைவியும், மாணிக்கம், பாலு, வாசு ஆகிய மூன்று மகன்களும், கர்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர்.
பொள்ளாச்சி மகாலிங்கம் மறைந்த தகவல் அறிந்ததும் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், ''தி.மு.க., சார்பிலும், தி.மு.க., தலைவர் கருணாநிதி சார்பிலும் அஞ்சலி செலுத்தினேன். பொள்ளாச்சி மகாலிங்கம் தொழிலதிபராக, ஆன்மிகவாதியாக மட்டுமல்லாமல் தமிழ் வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றியுள்ளார். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது'' எனத் தெரிவித்தார்.
பொள்ளாச்சி மகாலிங்கம் இழப்பு குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.
ராமதாஸ் இரங்கல் அறிக்கை:
பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மறைவு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
மெத்தப் படித்தவரும், பத்மபூஷன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவருமான பொள்ளாச்சி மகாலிங்கம் மிகவும் எளிமையானவர்; பழகுவதற்கு இனிமையானவர்.
இந்திய விடுதலைக்குப் பிறகு நடந்த மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியவர். இந்தக் காலத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டம் உட்பட எண்ணற்றத் திட்டங்களை உருவாக்கி, அவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்கப் பாடுபட்டவர். தமது கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமானவர்களுக்கு கல்வியும், தொழில் நிறுவனங்கள் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கியவர்.
காந்தியத்தையும், வள்ளலாரின் போதனைகளையும் தமது இரு கண்களாக கருதிய பொள்ளாச்சி மகாலிங்கம், காந்தியடிகளின் நினைவு நாளில், வள்ளலார் குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார் என்பதிலிருந்தே இரு கொள்கைகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்றை அறியலாம்.
பெரும் கொடையாளரும், மனிதநேயருமான பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மறைவு கல்வி, தொழில்துறை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும், காந்தியவாதிகள் மற்றும் வள்ளலார் கொள்கைகளை பின்பற்றுவோருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications