தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல்.. 27ம் தேதிக்குப் பின் தேதி தெரியும்.. மு.க.ஸ்டாலின் பரபரப்பு
கிருஷ்ணகிரி: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஒரு புது குண்டைப் போட்டுள்ளார். பெங்களூர் தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் செப்டம்பர் 27ம் தேதிக்குப் பின்னர் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வரும், தேதி அறிவிக்கப்படும் என்று அவர் புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார் என்று தெரியவில்லை.
ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குப் பாதகமாக தீர்ப்பு வரலாம் என்ற அனுமானத்தில் அவர் இவ்வாறு பேசியிருக்கலாம் என்று தெரிகிறது. கிருஷ்ணகிரியில் நடந்த திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்தான் இப்படிப் பேசியுள்ளார் ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய பேச்சு....

சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு
'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மத்திய புள்ளியியல் ஆய்வறிக்கையில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை. அவர்கள் கவலை எல்லாம், 27 ஆம் தேதி வெளிவரப்போகும் தீர்ப்பு பற்றித்தான் உள்ளது.

2016 என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்....
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2016ல் வரும் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், 27 ஆம் தேதி வரப்போகும் தீர்ப்பை பொறுத்து உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்படி நடக்காமல் 2016ல் தேர்தல் நடந்தாலும் தி.மு.க. தான் வெற்றிக் கனியை பறிக்கும்.

திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது
நாம் ஆட்சியை இழந்து 3 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த காலத்தில் நம் மீது எத்தனையோ வழக்குகள், சோதனைகள் சந்தித்தோம். பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தோம். இத்தனை நிகழ்வுகளுக்கு பிறகும், இங்கு எழுச்சியுடன் தொண்டர்கள் திரண்டு இருப்பதை பார்க்கும் போது தி.மு.க.வை எந்த சக்தியாலும் அசைத்துப் பார்க்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாகம் தீர்த்த திமுக
கடந்த தி.மு.க. ஆட்சியில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் ரூ.1,330 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் 2009 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. 2012க்குள் இந்த திட்டத்தை முடித்து தொடங்கி வைக்கும் வகையில் விரைவாக திட்டம் செய்யப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய நான் 15-க்கும் மேற்பட்ட முறை இந்த மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு நேரில் வந்தேன்.

அதிமுக தயாரா
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. நாங்கள் பலமுறை சட்டமன்றத்தில் குரல் எழுப்பியதை தொடர்ந்தும், போராட்டங்கள் நடத்தியதாலும், அவசரம், அவசரமாக 2013 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு 16 மாதங்களாகியும், ஒகேனக்கல் குடிநீர் 2 மாவட்ட மக்களுக்கும் முழுமையாக கிடைக்கவில்லை. இதை நான் நிரூபிக்க தயாராக உள்ளேன். குடிநீர் வழங்கப்படுகிறது என நிரூபிக்க அ.தி.மு.க. தயாரா என்றார் அவர்.

பரபரப்புக்காக பேசினாரா ஸ்டாலின்??
சமீப காலமாக திமுகவில் உட்கட்சிப் பூசல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ஓங்கியிருந்த மு.க.ஸ்டாலின் கை தற்போது தாழ்ந்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் இதுபோன்ற பரபரப்பான பேச்சுக்கள் மூலம் கட்சிக்குள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற ஸ்டாலின் முயல்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒருவேளை தீர்ப்பை மோப்பம் பிடித்து விட்டாரா...??
அல்லது பெங்களூர் கோர்ட்டில் அளிக்கப்படவுள்ள தீர்ப்பு குறித்த ரகசியம் ஏதேனும் அவருக்குத் தெரிந்து விட்டதா என்றும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications