செக்கம்பட்டி ராமரிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்.. சின்னமனூர் கடையில் டீ குடித்தார்
மதுரை: மதுரையிலிருந்து தேனி செல்லும் வழியில் செக்கம்பட்டி என்ற இடத்தில் இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் டீ கடை ஒன்றுக்குள் நுழைந்ததால் டீக்கடைக்காரர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
நமக்கு நாமே என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார் மு.க.ஸ்டாலின். மதுரையில் முகாமிட்டிருந்த அவர் இன்று தேனி மாவட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இன்று தனது மாவட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

எம்.ஜி.ஆர். சிலை அருகே
ஆண்டிப்பட்டிக்குக் கிளம்பி வந்த ஸ்டாலினுக்கு அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே மாவட்ட செயலாளர் மூக்கையா தலைமையில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

நடைப்பயணம்
பின்னர் அங்கிருந்து நடைப்பயணமாக சென்றார் ஸ்டாலின். அவருக்கு பள்ளி மாணவ மாணவியர், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். மக்களிடம் பேசியபடி நடந்தார் ஸ்டாலின்.

செக்கம்பட்டி டீக்கடை ஸ்டாப்
அப்படியே செக்கம்பட்டி வரை நடந்த ஸ்டாலின் அங்குள்ள டீக்கடைக்குள் நுழைந்தார். ஸ்டாலினை திடீரென பார்த்த கடைக்காரர் ராமர் என்பவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

ராமரிடம் விசாரிப்பு
பின்னர் ராமரிடம் பேசினார் ஸ்டாலின். எத்தனை வருடமாக கடை நடத்துகிறீர்கள், குடும்பத்தினர் குறித்தும், கடை வருமானம் குறித்தும் குறைகள் குறித்தும் விசாரித்துக் கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்.
அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் கம்பம் நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.

சின்னமனூரில் டீ குடித்தார்
வழியில் சின்னமனூர் சென்ற ஸ்டாலினுக்கு மக்கள் பெரும் திரளாக திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பேருந்தில் இருந்தவர்களும் ஸ்டாலினை வாழ்த்திக் குரல் எழுப்பினர். ஸ்டாலினும் பேருந்து ஜன்னல் வழியாக கைகுலுக்கி மகிழ்ந்தார். பின்னர் சாலையோர டீக்கடை ஒன்றில் டீ குடித்தார் ஸ்டாலின்.

ராயப்பன்பட்டியில் குறை கேட்பு
பின்னர் ராயன்பட்டிக்கு சென்று, 1967ல் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது திறந்துவைக்கப்பட்ட பள்ளியை பார்வையிட்டார். அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

வேதனைப்பட்ட விவசாயிகள்
அப்போது பேசிய பெரும்பாலான விவசாயிகள், மின்சாரம் இல்லாமல் வேதனைப்படுவதாகவும், திமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் எல்லாம் சீரழிந்து கிடக்கின்றன போன்ற பல குற்றச்சாட்டுகளை அவரிடத்தில் முன்வைத்தனர்.

ஒரு வருடத்தில் 68 விவசாயிகள் தற்கொலை
அவர்களுக்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின், இந்த ஒரு வருடத்தில் மட்டும் 68 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட எந்த மானியமும் சரிவர அதிமுக ஆட்சியில் சரிவர வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். உர மானியம், பயிர்கடன் வழங்கப்படவில்லை நெல்லுக்கும், கரும்புக்கும் உரிய விலை கிடைப்பதில்லை என அதிமுக ஆட்சியில் உள்ள அவலங்களை பட்டியலிட்டார். அதிமுக ஆட்சியில் இலவச திட்டங்கள்கூட கட்சி பாகுபாடோடு வழங்கிவருவதாக ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலை மாற வேண்டுமானால், இந்த ஆட்சி மாற வேண்டும். எனவே, உங்களை தேடி வரும் எங்களை, உங்களுக்காக உழைப்பதற்கு தேர்ந்தெடுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

திராட்சை விவசாயிகளுடன் சந்திப்பு
பின்னர் ஆணைப்பட்டி கிராமத்தில் திராட்சை விவசாயிகளை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய திராட்சை விவசாயிகள் இடைத் தரகர்களால் நாங்கள் மிகவும் ஏமாற்றப்படுவதாகவும் எங்களுக்கான உரிய விலை கிடைக்கப்பெறவில்லை என்றும், சரியான விலை நிர்ணயம் கூட செய்யப்படுவதில்லை என குற்றம்சாட்டினர்.

உங்களுக்காகத்தான் கிட்டங்கியை ஏற்படுத்தினோம்
அவர்களுக்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின், திராட்சை விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக்த்தான், கடந்த ஆட்சியில் இந்த பகுதியில் வணிக வளாகத்துடன் கூடிய திராட்சை குளிர்சாதன கிடங்கை உருவாக்கினோம், ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த கிடங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் யாருமே பயன்படுத்த முடியாத நிலையை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது. இது தான் இந்த பகுதியில் இந்த ஆட்சி செய்த சாதனை என ஸ்டாலின் கூறினார்.

இம்மி அளவு கூட ஜெயலலிதா செய்யவில்லை
மேலும், நீங்கள் எல்லாம் அதிக மகசூல் செய்வதற்காக, உயர்தர திராட்சையை தருவிக்க வேண்டும் என்பதற்காக திராட்சை ஆராட்சி மையம் இந்த பகுதியில் நிறுவப்பட்டது. உரிய நேரத்தில் வைகை அணையை தூர்வாரி, இந்த மாவட்ட விவசாயிகள் எல்லாம் பயன்பெறும் வகையில், தொடர்ந்து திட்டங்களை தீட்டியது. ஆனால் ஜெயல்லிதா ஆடசி இம்மி அளவும் மக்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. இந்த அவலங்களை எல்லாம் புரிந்து தேர்தலில் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என உங்கள தேடி வந்திருக்கிறேன். நல்லதொரு முடிவை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு, உங்களின் கோரிக்கையோடு, எங்களின் கோரிக்கையையும் உங்களிடத்தில் எடுத்துவைக்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications