தலைமறைவான மதன்.. விசாரணை அதிகாரி நியமனம்.. 2 வாரத்திற்குள் ஆஜர்படுத்த ஹைகோர்ட் உத்தரவு
சென்னை:வேந்தர் மூவிஸ் மதனை 2 வாரத்திற்குள் கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும். இதுதொடர்பான விசாரணையை கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம்வந்த வேந்தர் மூவிஸ் மதன் திடீரென காசி சென்று கங்கையில் சமாதி அடைகிறேன் என்று கடிதம் எழுதிவைத்து விட்டுக் காணாமல் போனார்.
காணாமல் போன மதன் மீது ஏராளமான பண மோசடி வழக்குகள் காவல் நிலையங்களில் குவிந்து வருகின்றன. மதனை மீட்டுத் தரவேண்டும் என அவரது தாயார் தங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மதன் காணாமல் போனது மற்றும் மதன் மீதான மோசடி வழக்குகள் ஆகிவற்றை தீவிரமாக விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

நீதிபதிகள்
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதன் மீதான மோசடிப் புகார்கள் மற்றும் அவரது மனைவிகள் கொடுத்த புகார்களை விசாரிக்க, நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவரை போலீஸ் கமிஷனர் நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கவில்லை என்றால் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேலை நாங்களே நியமிப்போம் என்று கூறினர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தனர்.

2 வாரத்திற்குள்
மீண்டும் மாலை 4 மணிக்கு மதன் வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2 வாரத்திற்குள் மதனை மீட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர். இதுதவிர மதன் மீது குவிந்திருக்கும் பண மோசடி வழக்குகளை தனியாக விசாரிக்க வேண்டும், எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஏடிஜிபி ராதாகிருஷ்ணன்
மதன் வழக்கில் விசாரணை அதிகாரியாக ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கடிதம் எழுதி வைத்து விட்டுப் போன மதன் உயிருடன் இருப்பது சமீபத்தில்தான் உறுதியானது. உ.பி விமான நிலையத்தில் சுற்றி வளைத்த போலீசிடம் இருந்து மதன் தப்பிச் சென்றதால் அவபர் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications