மதனை இன்னுமா கண்டுபிடிக்கல... கேஸை வேறு அமைப்புக்கு மாற்றவா? - நீதிபதிகள் அதிரடி
சென்னை: வேந்தர் மூவீஸ் மதனைக் கண்டுபிடிக்க போலீசார் மேலும் தாமதப்படுத்தினால் வழக்கை வேறு அமைப்புக்கு மாற்றிவிடப் போவதாக சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்த மதன். கடந்த மே மாதம் திடீரென தலைமறைவானார்.
அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவரது தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

ராதாகிருஷ்ணன் தலைமையில்
இந்த மனு மீதான விசாரணையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாக கூறி பல மாணவர்களிடம் பெரும் தொகை மோசடி செய்ததாக மதன் மீது புகார் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து மதன் காணாமல் போன வழக்கு, அவர் மீதான மோசடி வழக்குகள் ஆகியவை குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் அறிக்கை
இந்த தனிப்படை அதிகாரிகள், அவ்வப்போது தங்களது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப்படை அதிகாரிகள், தங்களது புலன் விசாரணை குறித்து அறிக்கையை தாக்கல் செய்தனர்.

கடும் கண்டனம்
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
"இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 70 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை போலீசாரின் புலன் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. மாணவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக சுகுமாரன், ரங்கபாஷியம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இதுவரை இருவரையும் போலீசார் விசாரிக்கவில்லை.
சுகுமாரன் வெளிநாட்டில் இருப்பதாக கடந்த முறை தாக்கல் செய்த அதே அறிக்கையை தற்போது போலீசார் தாக்கல் செய்துள்ளனர். ரங்கபாஷியத்தை இதுவரை விசாரிக்கவில்லை.

வேறு புலனாய்வு அமைப்பிடம்
பொதுவாக ஒரு வழக்கை தமிழக போலீசாரால் திறம்பட விசாரிக்க முடியவில்லை என்றால், வழக்கை வேறு ஒரு புலன் விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கலாம்.
எனவே, இந்த வழக்கு புலன் விசாரணையின் நிலை அறிக்கையை நாளை (வியாழக்கிழமை) தாக்கல் செய்யவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், வழக்கை வேறு புலன்விசாரணை அமைப்புக்கு மாற்ற முடிவு செய்வோம்," என்று நீதிபதிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications