வேந்தர் மூவிஸ் மதன் எங்கே இருக்கிறார்? தோழியிடம் போலீஸ் விசாரணை
சென்னை: எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி சீட் முறைகேடு வழக்கில் மாயமான மதனை கண்டுபிடிப்பதற்காக அவரின் தோழி கீதாஞ்சலியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஜூலை 27 ஆம் தேதி காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதன் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றார். அதில் காசிக்கு செல்கிறேன். கங்கையில் சமாதி அடையப்போவதாக குறிப்பிட்டிருந்தார். அவர் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் போலீசார் மதனைத் தேடி வந்தனர்.
இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் காணாமல் போன வேந்தர் மூவிஸ்
மதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டது.
இதனிடையே எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி 109 மாணவர்களிடம் வேந்தர் மூவிஸ் மதன் மூலமாக பச்சமுத்து, 75 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில் எஸ்.ஆர்.எம் கல்வி நிலையங்களின் நிறுவனர் பச்சமுத்து கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மதனை விரைவில் கொண்டு வந்து ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாரணாசி வரை தேடிச்சென்றும் இது வரை மதன் கிடைக்கவில்லை. மதனிடமிருந்த செல் போனைக் கொண்டு அவரிடம் தொடர்பில் இருந்த ஏராளமானவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
இந்நிலையில் மதன் கூட்டாளிகள் சுதிர், குணா ஆகிய இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தற்போது வேந்தர் மூவிஸ் மதனின் தோழி கீதாஞ்சலியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. மதன் எங்கே இருக்கிறார்? என்று அவரிடம் போலீசார் விசாரித்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு அவரை அனுப்பி வைத்தனர்.