சட்டசபையில் 'சரக்கு' ... ஆதரிப்பீர் 'குமாரசாமி'யை.. ஆர்.கே.நகரில் ஆரம்பித்தது அலம்பல்!
சென்னை: குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு என்பார்கள்.. அதேபோல மற்றவர்களை விட குடிகாரர்கள்தான் மிகத் "தெளிவாக"ப் பேசுவார்கள் என்றும் சிலர் அடித்துக் கூறுவார்கள்.. அதை உணமையாக்கி விட்டது தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்!
ஆர்.கே. நகர் தொகுதி குறித்து அரசியல் கட்சியினர் ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்க, மது குடிப்போர் சங்கமானது, வேட்பாளரையே அறிவித்து போஸ்டரும் ஒட்டி களத்தில் குதித்து களேபரப்படுத்தியுள்ளது.
என்ன காமெடி என்றால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காக அவர்கள் அறிவித்துள்ள வேட்பாளரின் பெயர் குமாரசாமி என்பதாகும்!
இதுதொடர்பாக அந்த சங்கத்தினர் ஒரு போஸ்டர் போட்டுள்ளனர். வழக்கம் போல மது புட்டியுடன் கூடிய அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள வாசகம்...
குடிக்கப் பிறந்த கூட்டமல்ல தமிழா... குடும்பக் குலப் பெருமை காக்கப் பிறந்த கூட்டமடா தமிழா...
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளப் பெருமக்களே
மதுவால் கணவனை இழந்த பெண்கள், அப்பாவை இழந்து அநாதைகளான குழந்தைகள், மகனை இழந்து மன வேதனையால் வாடும் அப்பா, அம்மாவிற்கு மாதந்தோறும் வாழ்வுரிமைத் தொகை ரூ. 3000, டாஸ்மாக் லாபத்திலிருந்து கிடைத்திட, மது சிகிச்சைக்கு தனி மருத்துவமனை அமைத்திட, சென்னை மாநகர மதுக் கடைகளை தீவுத் திடலுக்கு திசை திருப்பிட சட்டசபையில் சரக்கு பற்றிப் பேசிட...
உங்கள் வேட்பாளர் பொன். குமாரசாமி அவர்களுக்கு ஆதரவு தாரீர் தாரீர்... என்று போட்டு அசத்தியுள்ளனர் இந்த குடிகாரர்கள்.
வெளங்கிரும் செல்லாக்குட்டிகளா ... "சியர்ஸ்" கண்ணுங்களா!