'நான் பேசுறது கரெக்டா'... ஜெயக்குமாரிடம் கேட்டுக்கொண்டே பேட்டியளித்த மதுசூதனன்!
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வெற்றி உறுதி என்றார்.
Recommended Video

சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றும், தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்பதால் மக்களின் ஆதரவு தங்களுக்கே என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இன்று தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
மக்களுக்கு தொண்டு செய்வேன் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்த மதுசூதனன் அருகில் இருந்த அமைச்சர் ஜெயக்குமாரை பார்த்து கரெக்டா என்று கேட்டார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் புன்னகையோடு கரெக்ட் அண்ணா என்று தெரிவித்தார்.

சாதனைகளை முறியடிப்போம்
தொடர்ந்து பேசிய மதுசூதனன், நேற்று ஒரு குழல் துப்பாக்கியாக இருந்தோம் இப்போது இரட்டைக் குழல் துப்பாக்கியாக மாறி இருக்கிறோம். அதனால் தான் உறுதியாகச் சொல்கிறேன், அவர்களின் சாதனைகளை முறியடிப்போம்.

கரெக்டா பேசுறேனா?
டிடிவி. தினகரன் தனக்கு ஆதரவு இருப்பதாகச் சொல்கிறார், அவருடைய கனவை நான் ஏன் தடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இரண்டாவது முறையும் அமைச்சர் ஜெயக்குமாரை பார்த்து கரெக்ட்டா என்று கேட்டார்.

தேர்தல் ஆணையத்திடம் புகார்
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் 5 பேருக்கு மேல் வேட்பு மனு தாக்கலுக்கு ஆட்களை அழைத்து வரக்கூடாது. ஆனால் தினகரன் வெளிமாவட்டங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து மனு தாக்கல் செய்துள்ளார். இதனை தேர்தல் ஆணைய கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

சட்டப்படி தவறு
தேர்தல் ஆணையம் தெளிவான தீர்ப்பை தந்துள்ளது, இரட்டை இலை சின்னம், கொடி எங்களுக்கே என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே தினகரன் தரப்பினர் அதிமுக கொடியை பயன்படுத்துவது சட்டப்படி தவறு. இதையும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம்.

எப்படி பயன்படுத்தலாம்
தினகரன் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடுகிறார், இவருக்கு அதிமுக கொடியை பயன்படுத்த என்ன அருகதை இருக்கிறது. தான்தோன்றித் தனமாக இருக்கும் தினகரனுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications