கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி: அதிரடி உத்தரவிட்ட ஹைகோர்ட்
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் நல்லடக்கத்தை மெரீனாவில் நடத்த சென்னை ஹைகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற, திமுக தரப்பின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹுலவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அமர்வின் முன்பு திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஹுலுவாடி ரமேஷுடன், எஸ்.எஸ். சுந்தர் இணைந்து விசாரித்தனர். ஹுலுவாடி ரமேஷ் இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.

தமிழக அரசு சார்பில் சீனியர் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன் ஆஜராகியிருந்தார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினார். வாதம் அதிகாலை 1 மணிக்கு தொடங்கியது. தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க அவகாசம் கோரியதையடுத்து விசாரணை இன்று காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலோட்டமாக இந்த வழக்கை அணுக முடியாது என்பதால் எழுத்துப்பூர்வ பதிலை அரசு தரப்பு தாக்கல் செய்ய கோரப்பட்டது.
[READ THIS: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என்ன? திமுக தரப்பு அதிரடி வாதம் ]
என்ன சட்ட சிக்கல் உள்ளது என்பதை அரசு தெளிவாக தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். காலை 6 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்ய முடியுமா என அரசு தரப்பை நீதிபதிகள் கேட்டபோது, காலை 10.30 வரை நேரம் தருமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார். ஆனால் இது உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால், காலை 8 மணிக்காவது பதிலை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று காலை தமிழக அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மெரீனாவில் சமாதி அமைக்க இடம் தர இயலாத நிலை உள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு காந்தி மண்டப வளாகத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Read This: மெரினாவில்தான் இடம் வேண்டும் என்பது காந்தி, காமராஜரை அவமதிப்பதற்கு சமமாம்.. அரசு வழக்கறிஞர் வாதம் ]
இந்த மனு சுமார் இரண்டரை மணி நேரம் விவாதிக்கப்பட்டது. விசாரணையின்போது டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர்கள் துரைசாமி, பாமக பாலு ஆகியோர் தங்களது மனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் அதை ஏற்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் அரசு கூறி வந்த தடை நீங்கியது.
இருப்பினும், பல்வேறு காரணங்களை முன் வைத்து, மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் தர தேவையான காரணங்களை வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் காலை 10.45 மணிக்கு தனது தீர்ப்பை வெளியிட்டனர். மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ராஜாஜி ஹாலில் இந்த தகவல் ஒலிபெருக்கியில் தெரிவிக்கப்பட்டது. வாழ்க கோஷம் விண்ணை முட்டியது. ஸ்டாலின் கண்களில் நீர் ததும்ப கையெடுத்து கும்பிட்டார்.












Click it and Unblock the Notifications