நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் - திமுக, பாமக வழக்கு.. தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பிறப்பித்த தீர்ப்பை விமர்சித்து அதிமுகவினர் வைத்த போஸ்டர்கள், பேனர்கள் குறித்து திமுக, பாமக மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிபதி குன்ஹாவை கண்டித்தும், திட்டியும், அசிங்கமாக விமர்சித்தும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினர், பேனர் வைத்தனர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி, பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் மற்றும் நீதிபதி சத்யநாரயணா ஆகியோர் அடங்கிய முதலாவது பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அதை ஏற்றனர். பின்னர், நீதிபதியை அவமதித்த செயல் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதேபோல வேலூர் மாநகராட்சியில் நீதிபதி குன்ஹாவைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் விளக்கம் அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications