பொட்டு சுரேஷ் கொலை: அட்டாக் பாண்டிக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா?
மதுரை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தள்ளிவைத்துள்ளார். ஒரு ஆண்டுகாலமாக சிறையில் இருக்கும் அட்டாக் பாண்டிக்கு நாளைக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை, அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் 'பொட்டு' சுரேஷ், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தார். மத்திய அமைச்சராகவும், திமுக தென் மண்டல அமைப்புச் செயலராகவும் இருந்த மு.க. அழகிரிக்கு நெருக்கமாக இருந்த இவரை கடந்த 2013 ஜனவரி 31ம் தேதி டி.வி.எஸ். நகரில் மர்மக் கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, திமுக பிரமுகரும், அழகிரியின் மற்றொரு தீவிர ஆதரவாளருமான 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட 14 பேரைத் தேடினர். இவர்களில் 7 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தனர். மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர். முதல் குற்றவாளியாக கருதப்பட்ட அட்டாக் பாண்டி மட்டும் தலைமறைவானார்.
அட்டாக் பாண்டி பிடிபட்டால் திமுக முக்கியப் பிரமுகர்கள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி 2015 செப்டம்பரில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அட்டாக் பாண்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் நான் இல்லை. ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் போலீஸ் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். இந்த கொலை வழக்கில் எனக்குத் தொடர்பு உள்ளதாக கூறுவதில் முகாந்திரம் இல்லை. ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் எனது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. நீதிமன்றத்தின் எவ்வித நிபந்தனைகளுக்கும் உட்பட தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2-வது முறையாக உயர்நீதிமன்ற கிளையில் அட்டாக் பாண்டி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை பொட்டு சுரேஷ் செய்து வந்தார். இதனால் அவருக்கு தனித் தனி எதிரிகள் உள்ளனர். அவரது கொலைக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. இந்த வழக்கில் போலீசார் என்னை பொய்யாக சேர்த்துள்ளனர். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதி கோகுல் தாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார். நாளையாவது பொட்டு சுரேஷ்க்கு ஜாமீன் கிடைக்குமா என்று அவரது உறவினர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications