தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கோர்ட் இடைக்கால தடை!
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் வைகோ மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மேற்குத் தொடர்ச்சி மலையில் 8 லட்சம் டன் பாறைகளை வெடிவைத்து தகர்க்க உள்ளனர். ஆய்வு மையம் அமைக்கும் பகுதி நில அதிர்வு மண்டலத்துக்குள் வருகிறது. இதனால் கேரள, தமிழக மக்கள் பாதிக்கப்படுவர். முறையான ஆய்வு நடத்தாமல் இடத்தை தேர்வு செய்துள்ளனர். விவசாயத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை பொட்டிபுரத்தில் செயல்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை நியூட்ரினோ மையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் " பொட்டிபுரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து உரிய அனுமதி பெறும்வரை அங்கு ஆய்வுப் பணிகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது" என்று இடைக்கால உத்தரவிட்டனர். முக்கிய மனு மீதான விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications