டிடிவி தினகரன் மீதான ஃபெரா வழக்கை விசாரிக்க தடை… ஹைகோர்ட் திடீர் உத்தரவு
டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்கை எழும்பூம் நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்கை விசாரிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-97ம் ஆண்டு சசிகலா, டிடிவி. தினகரன், பாஸ்கரன் ஆகியோர் அப்போதய ஜெஜெ டிவிக்காக அமெரிக்காவில் உள்ள ரின் சார்ட் லிமிடெட் நிறுவனத்திடமும், சிங்கப்பூரில் உள்ள அப்புவெஸ் பாயின்ட் பிரைவேட் லிமிடட் நிறுவனத்திடமும் பணம் பரிவர்த்தனை செய்தனர்.
எந்த ஆவணமும் இல்லாமல் இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதால் 3 பேர் மீதும் அமலாக்க பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
குற்றச்சாட்டு பதிவு
இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
தினகரன் மனு
இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். மேலும், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இடைக்கால தடை
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. வருகிற 17ஆம் தேதி வரை விசாரணை நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
2 வாரத்திற்கு ஒத்தி வைப்பு
இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.