மதுரை விபத்து.... உயிர் பிரியும் நேரத்திலும் மார்போடு அணைத்து மகனைக் காப்பாற்றிய பெற்றோர்...!
மதுரை: மதுரையில் 18 பேர் பலியான கோர விபத்தில், உயிர் போகும் நேரத்திலும் மகனை நெஞ்சில் அனைத்துப் பெற்றோர் காப்பாற்றிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரம் கோபால்சாமி மலை அருகே, கரூரில் இருந்து சிமெண்ட் மூடைகளை ஏற்றி வந்த லாரியும், நெல்லையில் இருந்து கம்பத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் நேற்று மதியம் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில், ஒரு சிறுவன், ஒரு சிறுமி, 12 ஆண்கள், 4 பெண்கள் உட்பட மொத்தம் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்துக் குறித்து மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை நேற்று இரவு போக்குவரத்துத் துறை அமைச்சரும், இன்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரும் நேரில் பார்வையிட்டனர்.
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதபரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியானவர்களின் ளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களின் நெஞ்சை உருக்குவது போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மீட்புப் பணியின் போது, விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் உடல்கள் கைகளை அணைத்து கட்டிப்பிடித்தபடி மீட்கப்பட்டது.
மீட்புக் குழுவினர் அவர்களின் உடல்களைப் பிரித்தபோது, அந்த தம்பதியினருக்கு இடையே அவர்களது நான்கு வயது மகன் உயிருக்கு போராடிய நிலையில் சிக்கியிருந்ததைக் கண்டு மீட்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அச்சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீட்புக் குழுவினர் அனுமதித்தனர்.
விபத்து நடந்தபோது, மகனின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து, தங்கள் உடம்பையே பந்து போல் சுருட்டி, தங்கள் நெஞ்சுக்கூட்டில் அணைத்துப் பிடித்துள்ளனர். இதனால் அச்சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளான்.
மகன் மீது அப்பெற்றோர் வைத்திருந்த பாசத்தையும், விபத்து நடந்த நேரத்தில் உடனடியாக சாமர்த்தியமாகச் செயல்பட்ட விதத்தையும் கண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தோர் கண்ணீர் வடித்தனர்.












Click it and Unblock the Notifications