9ம் வகுப்பில் பெயில்... மனவேதனையில் தண்டவாளத்தில் தலை வைத்து 2 மாணவர்கள் தற்கொலை
மதுரை: மதுரை அருகே 9ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள மேலக்கோட்டை ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த முனியப்பன் என்பவரது 14 வயது மகன் சங்கர்பாண்டி. இவர் ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
சங்கரபாண்டியின் சகவகுப்பு மாணவர் தொட்டியப்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் கண்ணன். நெருங்கிய நண்பர்களான சங்கரபாண்டியும், சஞ்சய்கண்ணனும் நடந்து முடிந்த 9ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தனர். இதனால் இருவரும் பத்தாம் வகுப்பிற்குச் செல்ல இயலவில்லையே என்ற கவலையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து கிளம்பிய இருவரும், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, இன்று அதிகாலை திருமங்கலத்தை அடுத்துள்ள கரிசல்பட்டி பகுதியில் உள்ள தண்டவாள பகுதிக்கு வந்த நண்பர்கள் இருவரும், தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துக் கொண்டனர்.
அப்போது அதிவேகமாக அந்தப் பாதையில் வந்த ரயில் அவர்கள் மீது ஏறியது. இதில், நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தண்டவாளம் அருகே இரண்டு சடலங்கள் கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த மாணவர்கள் சங்கரபாண்டியன், சஞ்சய்கண்ணன் என்பது தெரிய வந்தது. உடனடியாக இது தொடர்பாக அவர்களது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. தகவல் அறிந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.