ப்ளூவேல்... விக்னேஷ் மரணமே முதலும் கடைசியுமாக இருக்கட்டும் - மதுரை ஆட்சியர்
ப்ளுவேல் ஆன்லைன் விளையாட்டுக்கு பலியான முதலும் கடைசியுமான நபராக விக்னேஷ் இருக்கட்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியுள்ளார்.
மதுரை: ப்ளூ வேல் விளையாட்டில் மாணவன் தற்கொலை குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறியுள்ளார். புளூ வேல் விளையாட்டு மிகவும் விபரீதமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், விக்னேஷின் கையில் ப்ளூ வேல் குறியீடு இடம்பெற்றுள்ளது.
விக்னேஷ் உடல் திருமங்கலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் பெற்றோர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வீரராகவராவ்,
விக்னேஷ் தற்கொலை பற்றி விளக்கம் அளித்தார்.
மாணவனின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னரே அனைத்து தகவல்களும் முழுமையாக தெரியவரும் என்று கூறினார்.

முழு விசாரணை நடக்கும்
மாணவர் தற்கொலை பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும். முதற்கட்ட விசாரணையில் மாணவரின் நோட்டில் ப்ளூவேல் பற்றி எழுதியுள்ளார். அவரது கையில் திமிங்கலம் படம் வரையப்பட்டுள்ளது. வேறு எந்த காயங்களும் கிடையாது.

தூக்கு போட்டு தற்கொலை
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளம் உள்ளது. மற்ற கன்பர்மேசன் இல்லாத தகவல்களைக் கூறி பீதியை ஏற்படுத்த விரும்பவில்லை. பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண்காணிப்பது அவசியம்.
தவறான தொழில்நுட்பத்திற்கு இளைஞர்கள் அடிமையாக வேண்டாம். தற்கொலை செய்து கொண்ட மாணவரே இது விளையாட்டு அல்ல, விபரீதம் என்று எழுதி வைத்துள்ளார்.

கண்காணிப்பு அவசியம்
பிள்ளைகள் தனிமைப்படுத்தப்படுவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். இணையதள விளையாட்டிற்கு அடிமையாகி உயிரை பறிக்கும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும்.

நண்பர்கள் கவனம்
ப்ளூவேல் விளையாட்டிற்கு அடிமையானவர்கள் குறித்து புகார் கொடுத்தால் கவுன்சிலிங் கொடுத்து காப்பாற்றலாம். யாராவது இந்த விளையாட்டை விளையாடுகிறார்களா என்பதை நண்பர்கள் கண்காணிக்க வேண்டும். பெற்றோர்கள் கண்காணித்தாலே ஆபத்தில் இருந்து காப்பாற்றலாம். நண்பர்கள் யாருக்காவது தெரிந்தால் பெற்றோர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு தகவல் தெரிவித்து உயிரை பாதுகாக்கலாம்.

வீடியோ பதிவு
இதில் யார் யார் விளையாடுகிறார்கள் என்பதை பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் விக்னேஷ் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போதுதான் விக்னேஷ் மரணம் பற்றிய உண்மை நிலவரம் தெரியவரும்.

விழிப்புணர்வு தேவை
பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண்டிப்பாக இளைய தலைமுறையினரை கண்காணிக்க வேண்டும். இணைய தளங்களில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கல்லூரிகளில் இண்டர்நெட் உபயோகம் செய்பவர்களை கண்காணிக்கலாம். விளையாட்டிற்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications