இறைச்சி மாடு விற்பனை விவகாரம்.. மேலும் 4 வாரம் தடையை நீட்டித்த ஹைகோர்ட்
இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கான தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்படுவதாக கடந்த மே மாதம் 26ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாடுகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால்,விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புகார் எழுந்தது. மேலும் தனி மனித உணவு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து மதுரையை சேர்ந்த செல்வகோமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த மே 30ம் தேதி ஒரு பொதுநலன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் உணவு மனிதனின் அடிப்படை உரிமை, இதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக ஏற்ற நீதிமன்றம் மத்திய அரசு விளக்கம் அளிக்கும் வரை அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாட்டிறைச்சி தடை விவகாரம் குறித்து பதில்மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். இதனை ஏற்ற நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்யும் வரை மேலும் 4 வாரங்களுக்கு மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு எதிரான தடை நீடிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications