கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு நாட்டுப்படகை அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவு!
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு செல்ல அடுத்த ஆண்டு முதல் நாட்டுப்படகுகளை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை : கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு செல்ல அடுத்த ஆண்டு முதல் நாட்டுப்படகுகளை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 பேர் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர். மனுவில் 1976 ஒப்பந்தப்படி கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்களை உலர்த்திக் கொள்ளவும், அங்குள்ள புனித அந்தோணியார் கோவில்திருவிழாவில் பங்கேற்கலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது.
கடந்த 2013ம் ஆண்டுவரை மீனவர்கள் நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க சென்றுவந்த நிலையில், அதற்கு பின்னர் மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது இது வியாபார நோக்கத்துடன் விசைப்படகில் ஒருவருக்கு ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் குடும்பத்துடன் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல முடியவில்லை என்று மனுதாரர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
முற்றிலும் வணிக நோக்கமாக மாறிவிட்ட நிலையில் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட நாட்டுப்படகில் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். நாட்டுப்படகில் பயணிப்பது ஆபத்து என்பதால் மீனவர்களின் நலன் கருதியே நாட்டுப்படகு அனுமதிக்கப்படவில்லை என்று அரசுத் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு கச்சத்தீவு திருவிழா நெருங்கி விட்டதால் இந்த ஆண்டு உத்தரவை அமல்படுத்த முடியாது. எனவே அடுத்த ஆண்டு முதல் நாட்டுப்படகுகளை கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதிப்பதோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.