நாகரீக மோகம்.. கிராமத்து மனைவியைக் கொன்ற கொடுமை... சிறையில் தவிக்கும் மதுரை என்ஜீனியர்!
சென்னை: நாகரீக மோகம் கொண்ட மதுரையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர், கிராமத்தைச் சேர்ந்த தனது மனைவியுடன் வாழ விரும்பாமல், கோபத்தில் அவரைக் கொலையும் செய்து விட்டு இப்போது சிறையில் அடைபட்டுள்ளார்.
நாகரீக மோகத்தால் நடந்த இந்தக் கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படித்த படிப்புக்கும், நடந்து கொண்ட விதத்திற்கும் சற்றும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது இந்த வழக்கு.
தங்களது மகனின் முட்டாள்தனமான காரியத்தை எண்ணி அவரது குடும்பத்தினர் இப்போது கண்ணீர்க் கடலில் தத்தளித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் டூ மதுரை
மதுரையைச் சேர்ந்தவர் சரவண். இவரது பூர்வீகம் ராஜஸ்தான் ஆகும். ஆனால் மதுரையில் நீண்ட காலத்திற்கு முன்பே செட்டிலாகி விட்டனர்.

கிராமத்து மனைவி சுகிதேவி
சரவணுக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த சுகிதேவி என்பவருக்கும் திருமணத்தை பெற்றோர் நடத்தி வைத்தனர். சுகிதேவி கிராமத்துப் பின்னணியைச் சேர்ந்தவர். ஆனால், கணவர், குடும்பத்தார் மீது பாசம் மிக்கவர்.

சென்னையில் குடித்தனம்
சென்னையில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றி வருகிறார் சரவண். அலுவலகம் வேளச்சேரி என்பதால் அருகில் உள்ள பள்ளிக்கரணையில் வீடு எடுத்து மனைவியுடன் தங்கியிருந்தார்.

கழுத்து அறுத்துக் கொலை
இரு தினங்களுக்கு முன்பு தான் சுகிதேவியும், சரவணின் தாய் அனுசியா, தம்பி சுபேஷ் ஆகியோர் சென்னை வந்தனர். நேற்று முன்தினம் காலை சரவணன் வேலைக்கு சென்றபின் அனுசியாவும், அவரது மகன் சுபேஷும் பாரிமுனைக்கு பொருட்கள் வாங்க சென்றுவிட்டனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் தனியாக இருந்த சுகிதேவி கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.

சரவண் மீது மாமனார், மாமியார் புகார்
சுகிதேவி கொலை செய்யப்பட்டு கிடந்தாலும் வீட்டில் நகை எதுவும் திருட்டு போகவில்லை. இதனால் சுகிதேவியின் கணவர் மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்த சுகிதேவியின் பெற்றோரும் தங்கள் மகளை சரவணன் தான் கொலை செய்து இருக்கவேண்டும் என்றனர்.

ஆம்.. நான்தான்.. !
இதையடுத்து சரவணை போலீஸார் தீவிரமாக விசாரித்தபோது தான்தான் கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார். நடந்தது குறித்தும் போலீஸாரிடம் விளக்கினார்.

நாகரீக மோகம்
போலீஸாரிடம் சரவண் கூறுகையில், நான் என்ஜீனியரிங் 3ம் ஆண்டு படிக்கும்போதே எனக்கும் சுகிதேவிக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர். நான் நாகரிகமாக வாழ ஆசைப்படுவேன். ஆனால் சுகிதேவி ராஜஸ்தானில் கிராமத்தில் வாழ்ந்த பெண் என்பதால் எனது விருப்பம்போல் இருக்கமாட்டாள். இதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டதால் நான் அவளை மதுரையில் எனது பெற்றோரிடம் விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டேன்.

கண்டித்த அப்பா, அம்மா
எனது தாய் மற்றும் உறவினர்கள் என்னை கண்டித்து மனைவியுடன் சேர்ந்து வாழ சென்னைக்கு அழைத்து வந்தனர். எனது தாய் கடைக்கு சென்றிருந்தபோது மனைவியுடன் சண்டை போட்டேன். அப்போது உன்னை தான் சென்னைக்கு வரக்கூடாது என்று சொன்னேன் அல்லவா, ஏன் வந்தாய்? என கேட்டேன்.

கொன்று விடு என்றாள்.. கொன்று விட்டேன்!
என்னை ஏன் நிம்மதியாக வாழவிடமாட்டேன் என்கிறாய், அதற்கு ஒரேயடியாக என்னை கொன்றுவிடு என்றாள். ஆத்திரத்தில் இருந்த நான் கத்தியை எடுத்து அவளது கழுத்தை அறுத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் சென்றுவிட்டேன் என்றார்.
தற்போது போலீஸார் சரவணை கைது செய்துள்ளனர். நாகரீக மோகத்தால் அருமையான மனைவியைக் கொன்ற சரவணின் செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications